Tuesday, March 19, 2013

சொல்லக் கூசும் கவிதை




கவிதைகளின் ட்ரெண்ட் முடிந்துவிட்டதே என்றும் வா.மு.கோமு ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பது ஊரறிந்த உண்மை ஆனால் அவரோட கவிதை எப்படி இருக்குமோ என்றும் K.பாக்யராஜ் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்றாலும் அவரின் டான்ஸ் போல சொதப்பி இருப்பாரோ? போல சில முன் எண்ணங்களுடன் தான் படிக்க ஆரம்பித்தேன் தொகுப்பை. ஆச்சரியம் கவிதையில் பரதநாட்டியமே ஆடியிருக்கிறார் கவிஞர்.

வா.மு.கோமு என்றால் பகடி, பகடி என்றால் வா.மு.கோமு என்று கூறுவது மிகையாகாது.

’புன்னகை’ என்ற கவிதையில்

“புள்ளையார் பால்குடிக்கிறார் என்றும்,………………………………………………………..பசுமாட்டின் கண்களுக்குள்

எம்.ஜி.ராமசந்திரன் தெரிகிறார் என்றும்”

சிலர் மேலே குறிப்பிட்டது போல சரடு விடும் போது இவர் புன்னகையை வீசுகிறார் ஆனால் இவர் சுந்தர ராமசாமி (அ) சுரா அவர்களின் முகம் கிணற்றில் தெரிகிறது என்று சரடு விட்டபோது மட்டும் மேலிருந்து கீழாகப் பார்க்கீறார்கள் என்று சமூகத்தை பகடி செய்கிறார்.

’வசீகரா’ கவிதையில் தன் காதலி அந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பார்


“கே.டி வியில் கிளாசிக் மேட்னி கண்டுகூட குதூகலமடையலாம்.………சாலையில் செல்லும் இளைஞர்களின்

தூக்கத்தைக் கூட கெடுக்கலாம்”

என்று மல்லாக்க படுத்து யோசிப்பது,

’கூட படித்தவள்கள்’ கவிதையில்

“எப்பம் பார்த்தாலும் திருடிக்தின்று கொண்டிருந்த லட்சுமி பொலீசுக்கு மாமூல் கொடுத்து சாராயம் விற்கிறாள்”


என்று ஒரு முதிர்கன்னி தன் கூட படித்தவள்களை பற்றி சிந்திப்பதையும் நகைச்சுவை ததும்ப கூறியுள்ளார்.

’திரைக்காட்சிகளை முன் வைத்து’  கவிதையில்

“எந்த பெண்ணிடம் கேட்டாலும்அப்பா லண்டனில் இருக்கிறார் என்கிறாள்இதைத்தான் நான் குட்டிப் பாப்பாவாக

இருந்ததிலிருந்து அம்மா எனக்குசொல்லி வருகிறாள் என்கிறாள்.”

கோலங்கள் மெஹா சீரியலை கலாய்த்திருப்பது எல்லாம் வயிறு வலிக்க சிரிக்க வைத்தன. உங்களையும் வைக்கும்.

சினிமாவின் ’தேனீர் இடைவேளை’ கவிதையில்

“அடுத்து அரங்கிற்கு வரப்போகும்படத்தின் ஸ்டில்களைப் பார்த்தபடிஇருக்கும் சிலரையும்”


என்ற வரியை படித்தவுடன் அந்த சிலரில் நானும் ஒருவன் என்று தோன்றியது.


’திருவிழா முடிந்த வீதி’,  ’கெணறுகள் கூறும் கவிதை’ போன்ற கவிதைகளில் யதார்த்தத்தை காட்சியாக கொண்டு வந்துமிருக்கிறார்.
அதுவும் கெணறுகள் கூறும் கவிதையில் ஒவ்வொரு ஊர் கிணற்றிற்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்று நம்ம ஊர் கிணறின் கதையை கேட்பது போல முடித்திருப்பது அருமை.

வழக்கமான வழவழா கொழகொழா வடிவங்களுக்கு விடுதலை தந்து வித்தியாசமான வடிவங்களில் கவிதையை பரிசோதித்திருக்கிறார். அவற்றுள் ‘பஸ் நிறுத்த காட்சி’ , ’அம்மாவின் கவலைகள்’ , ’அக்காபேச்சு’ , ’நீ செளக்கியமா?’, ’ங்ஙா’ ஆகியவை குறிப்பிட தகுந்தவை.

ஷாஜகான் என்று சொன்னவுடன் அவரின் கள்ளக்காதலி (ஃபேக்ட் ஃபேக்ட் ஃபேக்ட்) மும்தாஜ் ஞாபகம் வருவது போல வா.மு.கோமு என்றவுடன் சாந்தாமணி தோன்றுவார்.
சா.மணியின் புலம்பல் படலம் , கவிஞி கமலாவின் அந்தரங்கப்பாக்கள் என்று ஒரு 5% மட்டுமே தொகுப்பில் இருப்பது ஒரு குறையே!

சிலர் அவர்கள் வசிக்கும் ஊரை விட்டு பக்கத்து ஊர் சென்று அஜால் குஜால் படத்தை முக்காடிட்டு பார்ப்பதை போல வா.மு.கோமுவின் எழுத்து பிடித்திருந்தாலும் உள்ளூர ரசித்து வெளி நபர்களிடம் மருதம்,மதனமஞ்சரி வகையறா எழுத்து என்று கூறுவார்கள்.
அப்படிபட்ட வயோதிக பெரியோர்கள் கூட மகன்களின் பராமரிப்பு இல்லாமல் சிங்கிள் பீடி வழிக்க வக்கில்லாத நிலைமையில் ஒரு கிழவன் படும் கஷ்டத்தை சொல்லும் ‘சொல்லக் கூசும் கவிதை’ , அப்பாருவின் ’ஞாவகம் 1 to 8’ போன்ற கவிதைகளை படித்தபின் நன்றாக இருப்பதாக வெளியில் கூற வாய்ப்புண்டு.

காதல் ,காமம் (ரெண்டும் ஒன்றா?), புறக்கணிப்பு, ஏமாற்றம், முதிர்கன்னியின் புலம்பல், மகளிர் கலாச்சார காவல் (www.
ஆத்தாடியோ.com ,ஆதிக்கம்), சாதியம் ,பகடி ,கடவுள் ,அரசியல் இத்யாதி ,இத்யாதி என்று தமிழ் கூறும் நல்லுலகென்ற குடையின் கீழ் கிடைக்கும் அனைத்து நிழலையும் கவிதையில் பேசியிருக்கிறார்.


மொத்தத்தில் எல்லாருக்கும் பிடிக்குமா என்றால்?

ஆப்பிள் ஐபாட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையை ஹெட் செட்டில் கேட்பது சிலருக்கு பிடிக்கும். தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் பாடல்களை கொரியன் போன்களில் லவுட் ஸ்பீக்கரில் கேட்பது வேறு சிலருக்கு சுகம் தரும். இந்த ’சொல்லக் கூசும் கவிதை’ தொகுப்பு இரண்டாவது ரகமே!

0 0 0

சொல்லக் கூசும் கவிதை

ஆசிரியர். வா.மு.கோமு

விலை:ரூ 90

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்



0 0 0

நன்றி குறி - சிற்றிதழ். (http://issuu.com/kurimagazine)
 

No comments: