Tuesday, December 25, 2012

தல ரசிகனான கதை (2)


சென்னை எம்.ஐ.டியில் இன்ஞினியரிங் சேர்ந்து புதிய சாளரம் திறந்தாச்சு. 'ஆஞ்சநேயா', 'ஜனா' ஆகிய படங்கள் ஜுனியராக இருந்த நேரத்தில் ரிலிஸ்.பார்க்கவில்லை.

'அட்டகாசம்' தான் என்னுடைய அடுத்த ரவுண்டிற்கு அடிக்கல் என்றால் மிகையாகாது.

எனக்கு மட்டுமில்லாமல் சுற்றுப்பட்டு 18 ஊரின் அஜித் ரசிகர்களுக்கும் ஆஸ்தான தியேட்டரான தாம்பரம் வித்யாவில் முதல் நாள் இரண்டாவது காட்சிக்கு மிகப்பெரிய க்யூவில் நின்று முதல் பாட்டு முடிந்த பின் தான் உள்ளே போக முடிந்தது.

படம் பக்கா மாஸ்.புல்லரிப்பு. முதல் பாட்டை மிஸ்ஸியதால் திரும்பவும் பார்த்தேன்.

பின்புக்கு பின்பு அப்படம் கல்லூரி OATயில் திரையிட்டபோது நானும் சீனியர் சுஜுவும் தேங்காயில் சூடம் ஏற்றி உடைத்தோம்.ஆனால் அம்முறை படம் மொக்கையாக தெரிந்தது (இதை யாரும் நோட் பண்ணாதிங்க).

அடுத்ததாக 'ஜி' பாட்டு ரிலிஸ் ஆனதிலிருந்து 'சேமியா போல மீசை வச்ச சிறுத்தை நாங்க' பாட்டை தான் சேமியா மீசை வைத்திருந்த நான் அதிக முறை கேட்டிருப்பேன். ஆனாலும் படம் முதல் 3 நாளில் பார்க்கமுடியாமல் போனதால் 'நீ எல்லாம் என்னடா அஜித் ரசிகர்?' என்று படத்தை வீம்புக்கு பார்க்காமல் நீண்ட இடைவெளிக்கு பின்பு இந்திய டிவியில் முதல்முறையாக போட்டபோது வீம்பை தளர்த்தினேன்.

அப்பறம் தல புருஷ்லி போல மாறினார். மாறினபின் முதலில் வெளிவந்த 'பரமசிவன்' படத்துக்கு முதல்நாள் இருந்த கூட்டம் போல நீங்கள் ரெங்கநாதன் ஸ்ட்ரீட்டில் மட்டுமே பார்க்கக்கூடும்.
வித்யா தியேட்டரில் இருந்து பக்கத்து தெரு வரைக்கும் துரத்தி போலீஸ் அடி கொடுக்க ஓடி வந்து நேசனலில் சிம்புவின் 'சரவணா' விற்கு சென்றோம்.

அதனால் பரமசிவனை அடுத்த நாள் நைட் சோ தான் பார்க்க முடிஞ்சது.படம் குப்பை.ஆனாலும் ரெண்டு தடவை பார்த்தேன்.

தமிழ் புத்தாண்டு அன்று ரிலிஸான 'திருப்பதி' டிக்கெட்டுக்கு லைன்ல நிற்கும் போதே செருப்பு பிஞ்சு போச்சு.நரி மூஞ்சியில் முழிக்கலைங்க,கூட்டம் அப்படி! பிஞ்ச செருப்பை கைல தூக்கிட்டு உள்ளே போய் சீட் பிடித்து 'டே ராஜா இங்க வாடா' னு என் நண்பனை சீட் மேல ஏறி நின்னு கூப்பிட்டா போலிஸ் கிட்ட அடி(யோசிச்சு பார்த்தா நரி மூஞ்சி தான் போல).

வாழ்கையில் முதல் முறையாக 'கீரை விதைப்போம்' பாட்டை ஒன்ஸ்மோர் போட்டார்கள். இதுவரைக்கு வேறு பாட்டை நான் பார்த்ததில்லை.

அக்காலகட்டத்தில் கடைசியாக வித்யா தியேட்டரில் நன்றாக ரசித்து 2 முறை பார்த்த அஜித் படம் என்றால் 'வரலாறு' தான்.

ஏன் என்றால் 'ஆழ்வார்' தாம்பரம் நேசனலில் ரிலிஸ்.அப்பவே மொக்கையாக இருக்கும் என்று நம்பினேன் அது குப்பை தியேட்டர் என்பதால். முதல் ஷோ சென்ற தோழர்களிடம் ரிவ்யூ கேட்டால் அனைத்து துவாரங்களிலும் இரத்தம் என்றார்கள். சரி எதுக்கு ரிஸ்க் என்று நான் திருட்டு டிவிடில தான் பார்த்தேன். படம் சூப்பர்.

ஒரு சூட்சமம் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் தான் எனக்கு புரிந்தது. அது 'மொக்கைனு நினைத்து அஜித் படம் பார்த்தால் படம் சுமார் என்றால் கூட சூப்பர் போல தோன்றும்' என்பது.

இப்ப நினைக்கையில் மீண்டும் தாம்பரம் வித்யா தியேட்டரில் அதே கூட்ட நெரிசலில் நின்று அஜித் படம் பார்க்கும் அனுபவம் கிட்டுமா என்ற ஏக்கம் தான் மிச்சமிருக்கிறது.

(தொடரும்)


Tuesday, December 11, 2012

தல ரசிகனான கதை



டவுசர் அணிந்து பள்ளி சென்ற காலங்களில் என் சினிமா உலகம் என்பது ரஜினிகாந்த் படமும் டி.ராஜேந்தர் படமும் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்த தியேட்டர். வேறு படத்திற்கு வீட்டில் செல்ல மாட்டார்கள்.

பின்புக்கு பின்பு ஆறாம் வகுப்பில் என்னை திண்டுக்கல் அருகே இருக்கும் ஸ்கூலில் சேர்த்தனர். நானும் பள்ளி விட்டா வீடும் அதற்கு வைஸ் வர்ஸாவாகவும் தான் இருந்தேன் நைன்த் படிக்கும் போது திண்டுக்கல் நாகா தியேட்டரில் ’முகவரி’ ரிலிஸ் ஆன சுபமுகூர்த்த தினம் வரை.

பள்ளி தோழர்களுடன் படத்திற்கு கிளம்பிபோன அன்று தான் அஜித்குமார் எனக்கு அறிமுகம்.

லேட் V.M.C ஹனிஃபா ’படத்துக்குள் எடுக்கும் படத்தின்’ டைரக்டரை உதாசீனப் படுத்தியதும் மழைபொங்கி தலயெழுந்து பாடும் ’ஏ நிலவே’ பாடலின் உணர்ச்சிபூர்வமான முகபாவங்கள் அவரை பச்சக் என்று மனதில் ஒட்டி வைத்தது.

அப்படத்தில் ஜோதிகா,அஜித் வெய்ட் பார்ப்பது போல் ஒரு காட்சி வரும். அப்ப வரும் வாசகத்தை பார்த்துவிட்டு ’எனக்கெல்லாம் இப்படி ஒண்ணியும் வரமாட்டிங்குதே’ என்று ஒரு அண்ணன் நக்கலடித்தது பசுமரத்தாணியாக இன்றும்.

அடிக்கடி ’கீச்சு கிளியே’ பாடலை ஹம் பண்ணியது பிடித்து போய் 15 ரூபாய்க்கு டூப்ளிக்கெட் கேசட் வாங்கினேன் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

மேலும் அக்காலகட்டத்தில் முகவரியின் சுபம் போட்டு முடிக்காத கிளைமாக்ஸை மாற்றிட்டாங்க என்று புரளி வேறு கிளம்பியது சில முகவரி இல்லாதவர்களால்.

அதை நம்பி சிலபல மாதங்கள் கழித்து விசில் ஊதத் தெரியாததால்(இப்ப தெரியும்) வீட்டில் உபயோக படுத்தும் பால் குக்கரின் விசிலை ஆட்டைஸ் போட்டு வேடசந்தூர் சாந்தி திரையரங்களில் பார்த்தபோது தான் தெரிந்தது தியேட்டர் ஆப்ரேட்டரே ரெடி பண்ணின கிளைமாக்ஸ் என்று!

எடிட்டர் அண்டணி போல ஆக வேண்டிய ஆப்ரேட்டர். இப்ப என்ன செய்கிறார் என்று தெரியவில்லை?

சரி நாம தான் அஜித் ரசிகராய்டோம் என்று அவருடைய அடுத்த படமான ’கண்டுக்கொண்டேன் கண்டுகொண்டேன்’க்கு ஆயத்தம் ஆனேன். படம் கொஞ்சம் ரொம்பவே தள்ளிப் போனது. நானும் தள்ளிப்போனேன் ’ரெட்’ படம் வரை.

அவ்விடைவேளையில் நான் டிவியில் பார்த்த ’ரெட்டை ஜடை வயசும்’ , ’வாலியும்’ என்னை அஜித்தை வலுவாக பிடிக்க வைத்தது.

இப்ப எப்படி ’களவாணி’யை விஜய் டிவியில் ஒளிப்பரப்புகிறார்களோ அது போல ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில் ’ரெட்டை ஜடை வயசு’ ஒளிபரப்பினர். கவுண்டரும் அஜித்தும் பண்ணுற லோலாய் தாங்கமுடியாது .

அப்பறம் வாலி படம் பார்த்த போது ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் எங்க பக்கத்து வீட்டு அக்கா வீட்டுக்குள்ள வரவேயில்லை. அது ஏன் என்ற காரணம் தெரிய சில வருடங்கள் ஆனது:(

சரி ரெட்க்கு வருவோம்.

நான் தினத்தந்தி மற்றும் தினகரன்(பழைய சாணி பேப்பர்) ஆகியவைகளில் இருந்த ஸ்டில்லை டீக்கடைகளில் இருந்து சேகரித்து வீட்டில் ஒட்டி வைத்தேன். ஃபாண்ட் டிசைனும் அருமையாக இருக்கும்.
நிக் ஆர்ட்ஸின் ’இதிகாசம்’ ஸ்டில்லும் வைத்திருந்தேன்,இப்ப அதை காணலை என்பது உபரி செய்தி.

திண்டுக்கல் உமா தியேட்டரின் திறப்பு நாள் படம் ’ரெட்’ தான்!
முதல் ஷோவிற்கு வந்தவர்களுக்கு பிரியாணி பொட்டலம் தந்தாங்க என்றும் செய்தி வந்தது. என்னால் போக முடியாததால் நொந்துகொண்டேன்.

அச்சோகத்திலும் எனக்கு கிடைத்த அற்ப சந்தோசம் நான் மொட்டை அடித்திருந்தது தான். குங்குமப் பொட்டு வைத்து ரெட் கெட்டப் என்று ஊருக்குள் சொல்லிக்கலாம் இல்லையா?!

அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு படிப்பில் அதிக கவனம் செலுத்தினாலும் ’வில்லன்’ டோக்கன் ஷோ விற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த ஒரு தோழனின் தோழனிடம் சொல்லி வைத்து கிடைக்காமல் ஒட்டன்சத்திரம் சண்முகா(இன்றைய இந்தியன்) தியேட்டரில் இரண்டு முறை பார்த்தேன். ஒன்னே முக்கால் தடவை அஜித்திற்காக... மீதி கால் கிரண்க்காக...


(நாஸ்டால்ஜியா தொடரும்)